மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. தொடர் மழையால் நீர்த்தேக்கங்களுக்குக்கான நீர் வரத்தும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து நீர் ஓடைகள், பிரதான கங்கைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தற்போது பெருமளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக,
ஹட்டன் ஓயா
*போடைஸ் ஓயா
டயகம பகுதியில் ஆரம்பமாகும் மகாவலி கங்கை மற்றும் அதனுடன் இணையும் சிற்றாறுகளான காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா மற்றும் மரே ஓயா
காட்மோர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, டெவன் நீர்வீழ்ச்சி மற்றும் சென் கிளையர் நீர்வீழ்ச்சி
ஆகியவற்றில் வழமைக்கு மாறான அளவில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்தத் தொடர் மழையின் காரணமாக மலையகப் பகுதியில் உள்ள பிரதான நீர்மோட்டார் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதன்படி, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் சில அடிகளே உள்ள நிலையில் உள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உச்ச அளவை நெருங்கியுள்ளது.
மேலும், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை முழுமையாக எட்டியுள்ளதுடன், கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல மற்றும் விமலசுரேந்திர உள்ளிட்ட ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளது.
மத்திய மலைநாட்டில் தொடரும் இந்த மழைக் காரணமாக, இலங்கையின் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் தமது முழுமையான உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி, தீவிரமாக மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி தொகுப்பு: மஸ்கெலியாவிலிருந்து விசேட நிருபர்.
