பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மீது வீண் கல்விச் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.”
பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளையோர் சட்டங்கள் திருத்த மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
விடுமுறை என்பது பிள்ளைகளுக்கு மன ஓய்வு அளிப்பதற்காகவே வழங்கப்படுவதால், அக்காலத்தில் அவர்களின் மனதிற்கு அழுத்தம் தரும் வகையில் செயற்படுவதைத் தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தினார்.
பிள்ளைகளின் கல்வி மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மன நல்வாழ்வு குறித்தும் பரந்த அளவில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு பிள்ளை பாடசாலைக் கல்வியை ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டுமே பயில்வதில்லை என்றும், 13 வருடங்கள் வரை கல்வி கற்பதனால், பரீட்சைப் பெறுபேறுகளை வைத்து மட்டும் அவர்களின் எதிர்கால வெற்றியைத் தீர்மானிக்க முடியாது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“பிள்ளைகளுக்கு விடுமுறை தேவை. எனவே, விடுமுறைக் காலத்தில் அவர்களைச் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கவும்” என அவர் பெற்றோரையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டார்.
