*”அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*
தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை உணராமல், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கடந்த கால அரசாங்கங்களையும் சுற்றறிக்கைகளையும் குற்றம் சாட்டி நேரத்தை வீணடித்து வருவதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள செவிலியர் ஆடை விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் (20) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கத்திடம் தான் அதிகாரம் உள்ளது என்பதைத் தற்போதைய ஆட்சியாளர்கள் அடிக்கடி மறந்து விடுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் குறைகளைச் சுட்டிக்காட்ட மட்டுமே முடியும்; ஆனால், தீர்வைக் கொண்டுவரும் அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது.
ஆடைப் பிரச்சினைக்கு பழைய சுற்றறிக்கையே காரணம் எனக் கூறுவது வேடிக்கையானது.
சுற்றறிக்கை என்பது பகவத் கீதையோ, திருக்குரானோ, விவிலியமோ அல்லது தம்மப்பதமோ கிடையாது. தவறான சுற்றறிக்கையாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி அமைக்க அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.
இரண்டு ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் இன்னமும் பழியை மட்டுமே சுமத்துவது வெட்கக்கேடானது என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீது நம்பிக்கையிருப்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தில் உள்ள சில முட்டாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலேயே ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் எனக் எச்சரித்தார்.
குறிப்பாக, அரசில் அங்க வகிக்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தச் செவிலியர் ஆடைப் பிரச்சினையை சுகாதார அமைச்சர் ஒரே நாளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்திருக்க முடியும். ஆனால், முறையான நடவடிக்கை இல்லாததால் சமூக வலைதளங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிளவுகளும் கருத்து மோதல்களும் உருவாகி வருகின்றன.
சிறுபான்மைக் கட்சிகள் அல்லது பிற தலைவர்கள் யாராக இருந்தாலும், தாம் மக்களுடனேயே நிற்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் அறிவார்த்தமான முறையில் இந்த விவகாரங்களைக் கையாள வேண்டும் என ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
