முச்சக்கர வண்டிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 40 ஆக உயர்த்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் மனிதவள மேம்பாடு மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே இளைஞர்கள் எவரும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபடுவதை அரசாங்கம் ஊக்குவிக்காது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்குப் பதிலாக அவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை நோக்கி வழிநடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “எமது நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளின் கையில்தான் உள்ளது. எனவே, இளைஞர்கள் பாடசாலைக் கல்வியை முடித்த கையோடு முச்சக்கர வண்டியுடன் வீதிக்கு வரக்கூடாது. அதனால்தான் கல்வித் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி, இத்தகைய புதிய ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
