கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன
2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த கபரகல 50 குடும்பங்களுக்காக அமைக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீடமைப்பு திட்டத்தின் 50 வீடுகள், ஆகஸ்ட் 28 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இதற்கமைய,புதிய வீடுகளில் குடியேறும் 50 குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான வீட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வு, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் இன்று (25) நடைபெற்றது.
இந்த வீடமைப்பு திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கும் தலா 10 பரப்பு காணி மற்றும் 550 சதுர அடி கொண்ட முழுமையான 50 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டை அமைப்பதற்கு சுமார் 32 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
வீடு மற்றும் காணி வழங்குவதோடு மட்டுமல்லாமல், புதிய வீட்டில் அன்றாட வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு தேவையான வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 175,000 ரூபாய் பெறுமதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படுவது இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில், பல வருடங்களாக பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டியிருந்த 50 குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு, சொந்த காணி, கௌரவமாக வாழும் வாய்ப்பு மற்றும் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகளும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கின்றன.
இந்த நிகழ்வில் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்னன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் ரவீந்திர பண்டார ஆகியோர், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலகம ஆகியோர், அனுசரணையாளர்கள் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
