செ. திவாகரன்.
கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்.
கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 43 வயதுடைய சித்ரா தேவி என்ற பெண், அவரது கணவரால் கோடரியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு சிகிச்சை பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து, குறித்த பெண்ணின் 32 வயதுடைய கணவர், தான் மனைவியை கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.
தனிப்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாக்குதலை மேற்கொண்டதாக ஒப்புக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்த சந்தேக நபரை இன்று (30) நுவரெலியா மாவட்ட நீதிவான்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
