தெஹிவளை – கவுதானை, சிறிசங்கபோ வீதியிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் திகதி அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில், 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் தந்தையும் படுகாயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், தாக்குதலை நேரடியாக நடத்திய பிரதான சந்தேகநபரும், அவருக்கு முச்சக்கரவண்டியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து உதவிய மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கைதான சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
