வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறைமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை காவல்துறையின் நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மூன்று அதிகாரிகள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வெலிக்கடை காவல்துறை பொறுப்பதிகாரியை பணியிடை நீக்குவதா? அல்லது இடமாற்றம் செய்வதா? என்பது தொடர்பாக தீர்மானிப்பதற்கான பரிந்துரையை முன்வைக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.
பதுளையைச் சேர்ந்த 42 வயதான குறித்த பெண், தாம் பணியாற்றிய வீட்டில் இடம்பெற்ற தங்க ஆபரண திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
குறித்த வீட்டின் உரிமையாளரான தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பெண் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அங்கு பணியாற்றிய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தினத்தன்று அவர் வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் வைத்து, உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் மரணித்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தமது மனைவியின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி குறித்த பெண்ணின் கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், வெலிக்கடை காவல்துறை சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணம் முன்வைத்துள்ளது.
இதன்போது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வேறொரு உயர் அதிகாரிக்கு பொறுப்பளிக்குமாறு கோரியுள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும்போது, காவல்துறையால் தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியல் பேணப்படுகின்ற நிலையில், அந்தப் பட்டியலை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், குறித்த பெண்ணின் பெயர் வெலிக்கடை காவல்துறையின் தடுத்து வைக்கப்படுபவர்களின் பெயர்ப்பட்டியலில் பதியப்படவில்லை என வெலிக்கடை காவல்துறை நேற்றைய தினம் மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.
