ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியை இலங்கையும் வென்றிருந்த நிலையில், ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை இலங்கை கைப்பற்றியது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தானின் அணித்தலைவர் ஹஷ்மதுல்லாஹ் ஷாகிடி, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், லஹிரு குமார (2), துஷ்மந்த சமீர (4), வனிடு ஹஸரங்க (3), மகேஷ் தீக்ஷனவிடம் வரிசையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்றது.
பதிலுக்கு 117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பதும் நிஸங்கவின் 51 (34), திமுத் கருணாரட்ணவின் 56 (45) ஓட்டங்களோடு 16 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாகவும், தொடரின் நாயகனாகவும் சமீர தெரிவானார்.