மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்தமையினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் (26) செயலக வளாகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மதுஷிகனையும் அவரது பெற்றோரையும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் புனித மிக்கேல் கல்லூரி ஆகியவற்றின் பாண்டு வாத்திய இசை முழங்க மலர்மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் வரவேற்புரையினை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்பரன் நிகழ்த்தியதுடன் மதுஷிகன் தொடர்பான அறிமுகத்தினையும் நிகழ்த்தினார்.
இதன்போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்ததுடன் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திய சாதனையாளரான மதுஷிகன் பாராட்டப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் நினைவுச்சின்னம் மற்றும் நிதி அன்பளிப்பு என்பன வழங்கி கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நீச்சல் திறமைக்காக 12 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ள, மதுஷிகன் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30 கிலோ மீற்றர் தூரமான பாக்கு நீரிணையை சுமார் 12 மணித்தியாலம் 58 நிமிடங்களில் நீந்திக் கரை சேர்ந்தார்.
கல்வி பொதுத் தராதர உயர் தரத்தில் கணித துறையில் தமது பாடசாலைக் கல்வியை கற்றதுடன் இலங்கை சாரணியப் படையில் இணைந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி ஜனாதிபதி சாரணிய விருதினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
