இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் 19 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) 2026 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்களில் இலங்கை பங்கெடுக்க முடியும்.
கடந்த மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியவை கடுமையான நிபந்தனை அடிப்படையில் 2026 பிபா உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான உத்தியோகபூர்வ போட்டியில் இலங்கையை சேர்க்க முடிவு செய்தது.
இலங்கை கால்பந்து சம்மேளனம் தகுதிச் சுற்றுகளின் தொடக்க ஆட்டப் பகுதிக்கு குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னதாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இலங்கையை உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் சேர்க்க FIFA மற்றும் AFC ஒப்புக்கொண்டன.
பிபா, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி, பிபாவினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் அல்லது போட்டிகளில் பங்கேற்க இலங்கை இப்போது தகுதியை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
