கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான 27வது பொது பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களாக (7ஆம், 8ஆம் திகதிகளில்) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கத்தின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற இப்பொது பட்டமளிப்பு விழாவில், 1760 கலாநிதி பட்டம், பட்டப்பின் படிப்பு பட்டங்கள், உள்வாரி, மற்றும் வெளிவாரி பட்டங்கள் வழங்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன.
பட்டமளிப்பு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் 07 ஆம் திகதி இடம்பெற்றதுடன் இதன்போது கலாநிதிப்பட்டம், விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் முதுமாணி, கல்வியியல் முதுமாணி, கலை முதுமாணி, வியாபார நிர்வாக முதுமாணி, அபிவிருத்தி பொருளியல் முதுமாணி, முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஆகிய 55 பட்டப்பின் தகைமைகளுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்வின் முதலாவது அமர்வில் 251 பட்டதாரிகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அமர்வுகளில் முறையே 338 மற்றும் 311 இளமாணிப்பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராகவும் இலங்கை – மாலைதீவு மற்றும் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் முன்னணி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான கலாநிதி ஹர்ஷ அதுருபான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
