தீபாவளி பிறந்த கதையை சற்று நோக்கினால், பொதுவாக தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்வதற்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.
பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்த நரகாசுரன் தொடர்ந்து ஏற்படுத்திய அநீதியை அடுத்து, இந்திரன் முறையிட்ட காரணத்தால் கிருஷ்ண பகவான் நடத்திய லீலையில் சத்திய பாமா நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரம் ராமர் அவதாரம் ஆகும். சீதையை மீட்பதற்காக இலங்கை சென்று ராவணனை வதம் செய்த ராமர், மீண்டும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்றும் அந்த நாளையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடுகின்றார்கள்.
அக்காலத்தில் பண்டிகைகள் அதிகளவான ஆடம்பரம் இன்றி தங்களிடம் இருக்கும் பொருட்களை கொண்டு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பண்டிகைகள் அனைத்தும் காலம் செல்ல செல்ல ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு உணவு முறை, வகை வகையான புத்தாடைகள், இனிப்புக்கள் என்று பல்வேறு கலாச்சாரங்களை கொண்டு மாற்றமடைந்து வருகின்றது. வியாபார உலகம் விருத்தியடைய ஒவ்வொரு நாட்களும் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் இலாபத்தையே ஈட்டிக் கொள்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் என்றாலே சில உற்பத்தி நிறுவனங்கள் தனது உத்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.
தீபாவளி வந்துவிட்டால் வருமானம் சரியாக கிடைக்காவிட்டாலும் அதாவது தற்காலத்தில் கொவிட் தொற்றுக்கு பிறகு வேலையின்மை, உற்பத்தி பற்றாக்குறை, சம்பள குறைவு, பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தாலும் பரவாயில்லை தீபாவளி என்றால் புத்தாடை வாங்க வேண்டும், பல வகை உணவுகளை சுவைக்க வேண்டும், களியாட்டங்களுக்கு மேலதிகமாக செலவிட வேண்டும், தீபாவளியில் தரித்திரமான சாராயத்தினை இணைத்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர் இவ் உற்பத்தி நிறுவனங்கள். அதனையும் ஏமாந்து கடன் பட்டாலும் தீபாவளியை கொண்டாட வேண்டும், என்ற தொழிலாளர்களின் நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போம். உணவு, உடை என்பன அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்று தீபாவளியில் அதற்காக ஆடம்பரமாக பணத்தை செலவிடுவதை தவிர்த்து தேவைக்கு ஏற்றவற்றை செய்யலாம்.
இவ்வாறு இருக்கையில் தீபாவளியில் தரித்திரமான சாராயத்தினை இணைத்துக் கொண்டது யார்? என்று வினவும் போது சாராய, பியர் கம்பனிகள் தமது உற்பத்தியை பெருக்கிக் கொள்வதற்காக கையாளும் தந்திரோபாய உத்தியே! எம் சமூகத்தில் சிலரின் கருத்துக்களாக “ சாராயம் இருந்தால் தான் தீபாவளி முழுமையடையும், சாராயம் தான் சந்தோஷத்தை ஏற்படுத்தும், தீபாவளியானது சாராயத்தோடு இணைந்தால் குதூகலமாக அந்நாள் நிறைவடையும்.” என பல மூடநம்பிக்கையான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவற்றின் உண்மை நிலைப்பாட்டினை ஆராய்ந்து பார்ப்பது சிறந்தது.
உதாரணம் – சாராயம் குடித்தால் சந்தோஷம் ஏற்படுகின்றதா? என்ற வினாவை எழுப்பும் போது. சாராயம், பியர்வகைகளில் இருக்கும் “எல்கஹோல்” என்கின்ற இரசாயனத்தை விஞ்ஞான ரீதியாக நோக்குகின்றபோது, இந்த இரசாயனத்தின் பண்பானது மனிதர்களை மந்தமாக்குவதே (சோர்வு) ஆகும். அவற்றை அருந்தும் போது அவர்களின் முகங்களைப் பார்த்தால், முகத்தை சுழித்துக்கொண்டு, ஒரே தடவையில் மடக்கென்று சாராயத்தை குடிப்பது ,அதில் மகிழ்ச்சி இருப்பதனாலா?. அல்லது
நாம் சொல்லும் வசனம் ,நாம் உருவாக்கும் அடையாளம் ,குடிக்கும் விதம்,குடிக்குமிடம் என்பன எம்மை இச்சூழலில் சந்தோஷமாக அருக்க செய்கின்றதா? என சிந்தித்தல்.
இவ்வாறு தீபாவளி அன்று எமது வீடுகளில் சாராயத்தை கொண்டுவருவதால் ஏற்படும் நஷ்டங்கள் எவை என பட்டியலிட்டுப் பார்ப்போம்.
சாராயத்திற்காக செலவிடும் வீணான பணத்தொகை, சாராயம் குடித்த பின் இதனை ஒரு காரணமாக காட்டி, ஒரு சாட்டாக வைத்து ஏற்படுத்தப்படும் வன்முறைகள், வாக்குவாதங்கள், தொல்லைகளினால் முழுமையாக தீபாவளியை சிறப்பிக்க முடியாது, மன மகிழ்ச்சி இல்லாமல் போதல், வீட்டில் தீபாவளி; இப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, திட்டமிடல் என்பன உடைக்கப்படுகின்றது, மலர்ச்சியான முகத்தை வைத்திருக்காமல் “சாராயம் குடித்து தூங்கு மூஞ்சிக் காரர்களாக” இருத்தல், சாராயம் குடித்தவர்கள் எல்லோரிடமும் போய் முகம் கொடுத்து பேச வெட்கப்படுவார்கள், சாராயம் கொடுத்து குடிப்பவர்கள் அவர்கள் இறப்பதற்கு வழிவகுத்தல், இது போன்ற பல்வேறு பாதகமான விளைவுகள் சாராயம் கொடுப்பதால் ஏற்படுகின்றன.
வீட்டில் இருக்கும்; சிறுவர்கள் மதுசாரப் பாவனைக்கு ஆளாகுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும், வீட்டில் ஆண்கள் மதுசாரம் அருந்தும் போது ஏனையோர் அசௌகரியத்துடன் இருக்க வேண்டும். தீபாவளிக்காக வீட்டில் செய்திருக்கும் உணவுகளை சுவைத்து உண்ணாது உணவினை வீண்விரயம் செய்வார்கள். இது போன்ற பல்வேறு விடயங்களை பட்டியல் இட்டுக் கொண்டே செல்லலாம்.
தீபாவளியுடன் சாராயத்தை இணைத்தவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை நாம் அறிந்திருக்க வேண்டிய ஒன்றே!
இலங்கையில் ஏற்படும் மரணங்களில் அதிகளவான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. இந்த மரணங்களிற்குப் பிரதான இரண்டாவது பின்னனிக் காரணி மதுசார பாவனை ஆகும். எமது நாட்டில் மாத்திரம், மதுசாரம் அருந்துவதனால் நாளொன்றிற்கு சுமார் 36 – 45 பேர் மரணிக்கின்றனர். அதனால் உற்பத்தி நிறுவனங்கள் தனது இலக்காக இளைஞர்கள், சிறுவர்களை அடுத்த கட்ட பாவனைக்கு பழக்குவதற்காக முயற்ச்சி செய்கின்றனர்.
சமூகத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை சூரையாடுவதற்கும் இலாபத்தினை ஈட்டிக் கொள்வதற்கும் இவ் நிறுவனங்கள் நோக்காக கொண்டு செயற்படுகின்றனர்.
தனது உற்பத்தி பொருட்களை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதும், சமூகத்தில் அனைவரும் ஏமாந்து சாராயத்தை குடிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ அவர்களிடம் காணப்படும்.
தீபாவளியன்று வீடுகளுக்கு சாராயத்தை கொண்டுவராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்.
தீபாவளியன்று சாராயம் குடிப்பதால்; ஏற்படும் பண வீண்விரயத்தினை பட்டியலிட்டு காட்டல், சாராயம் கொடுப்பதால் ஏற்படும் நஷ்டங்களை எடுத்துக் கூறல், சாராயத்திற்காக செலவழிக்கும் பணத்தினை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தல், சாராயம் கொடுத்தால் தான் கௌரவம் என்ற கருத்தினை மாற்றி “சாராயம் கொடுக்காமல் தீபாவளியை கொண்டாடுவதே கௌரவம்” என்ற தெளிவிற்கு வருதல், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீபாவளிக்கு சாராயத்தை கொண்டுவராமல் தவிர்த்தல்.
தீபாவளி தினத்தன்று நகர் பிரதேசங்கள், கிராமப் பகுதிகளில் துடிப்பான இளைஞர்கள் சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்தலாம். “தீபாவளிக்கு கட்டாயம் சாராயம் வழங்க வேண்டும.;” என்கின்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளல். இது போன்ற அன்றாட வாழ்க்கையில் எம்மால் செய்யக் கூடிய சிறிய சிறிய செயற்பாடுகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தீபாவளியன்று வீடுகளுக்கு சாராயத்தை வீடுகளுக்கு கொண்டு வராமல் இருப்பதால்; எமக்கு கிடைக்கும் இலாபங்கள் சிலவற்றை பட்டியலிடலாம்.
மகிழ்ச்சியின் உச்சக் காட்டத்தை அடைய முடியும், சாராயத்திற்காக வீணாக செலவிடும் பணத்தினை சேமிக்கவோ அல்லது வேறு செலவுகளுக்காகவோ பயன்படுத்த முடியும், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தீபாவளியை சுவையான உணவுகள் உண்டு, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழலாம், பிரதேசத்தில் அல்லது வீட்டில் சண்டை ,வன்முறை, வாக்குவாதங்கள் குறைந்து அமைதியான தீபாவளியை கொண்டாடலாம். இது போன்ற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பல்வேறு விடயங்கள் இலாபமாக அமையும்.
“சத்திய பாமா நரகாசுரனை வதம் செய்தது, ராமர் ராவணணை வதம் செய்ததற்காக” மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் தீபாவளியை தரித்திரமான சாராயத்தை இணைத்து மகிழ்ச்சியை அடியோடு அழித்து விடாமல் புனிதமாகவும் சாராய கம்பனிகளுக்கு ஏமாறாமல் உழைத்த பணத்தினை அவர்களின் இலாபத்திற்காக கொடுக்காமல் சிந்தித்து எமக்காகவும் குடும்பத்திற்காகவும் செலவிட்டு மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடுவோம்.
