சப்ரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி நகர் – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ஆழி சூழ் உலகினையே ஆட்டுவிக்கும் பெருமானே
ஆறுதலைத் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
அச்சம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

மலைசூழ்ந்த பெருநகரின் மத்தியிலே அமர்ந்துள்ள பெருமானே
மானமுடன் மனிதகுலம் வாழ வைக்க வாருமைய்யா
மனச்சோர்வு அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

நஞ்சுண்டு நலமளித்த நாயகனே பெருமானே
நல்லமனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
நஞ்சு மனம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

திரிபுர சுந்தரி அன்னையை அருகு கொண்ட பெருமானே
தெளிவான மனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
தொல்லையற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

உலகத்தின் மையத்தைக் காலடியில் கொண்டவனே பெருமானே
உண்மைக்கு உயர்வுநிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
உறுத்தலற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்
கேட்டவரம் தந்துலகைக் காக்கின்ற பெருமானே
கேடற்ற நன்னிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
களங்கமற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
