டி.சந்ரு செ.திவாகரன்
நானுஓயா டெஸ்போட்டில் சமூர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக போராட்டம்
கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்திற்கு முன்பாக இன்று (25) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இப்பகுதியில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஊழல் செய்வதாகவும், நேர்மையாக செயற்படவில்லை என்றும் குறிப்பாக ஒரு சிலருக்கு மாத்திரம் அனைத்து சலுகைகளும் வழங்குவதாகவும் , அதிலும் சமூர்த்தி உத்தியோகத்தரின் உறவினர்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் இதில் உள்ளனர் ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,சிறு நீரக நோயாளிகள் உட்பட பலர் இப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு எவ்விதமான சமுர்த்தி உதவிகளும் கிடைப்பதில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஒன்றுதிரண்டு அரசாங்கத்தால் கிடைக்கும் உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், நேர்மையாக செயற்படும் அதிகாரிகள் இன்றி மன உளைச்சலை ஏற்படுத்தாதே, உங்களின் சுயநலன்களுக்காக பொது மக்களின் விளையாடாதே, அதிகாரிகளின் தேவைக்காக பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்காதே, சுயநலத்துடன் செயல்பட்டு பொது மக்களின் மனங்களை நோகடிக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

