செ.திவாகரன் டி.சந்ரு
நானுஓயாவிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை இழுத்தடிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி நாட்டில் பல இடங்களில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக நானுஓயா பிரதான நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தலைமையில் (21) ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்ததுடன் அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனினும் கம்பனிகள் 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன் அரசாங்கத்தின் தீர்மானத்தையும் ஏற்க மறுத்து வருகின்றன.
இது தொடர்பில் தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது .
இதற்கு எதிராக நானுஓயா நகர வர்த்தகர்கள் தங்களின் வர்த்தக நிலையங்களை இரு மணி நேரம் அடைத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் பெருமளவான தொழிலாளர்களும் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் பிரதான நகரில் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டும் தமது எதிர்பினை வெளிப்படுத்தினர்.அத்துடன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்காதீர், சம்பள விடயத்தில் இழுத்தடிப்பு வேண்டாம் , தொழிலாளர்களை ஏமாற்றாதீர்கள் போன்ற அரசுக்கு எதிரான வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நானுஓயா பொலிஸார் இப்போராட்டத்திற்கான பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடதக்கது.
