எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பதைத் தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டு வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்படும்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்தியானந்த மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டமும் கம்பஹா நகரமும் எதிர்காலத்தில் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து நேற்று (05) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இது கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் (ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல்) பொறியியலாளர் கே.எச். கீர்த்திரத்ன இங்கு மூன்று அம்ச நிகழ்ச்சிகளை வழங்கினார்.
இந்த மும்முனை திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை நியமிக்கப்பட்ட கூட்டு வழிநடத்தல் குழுவிடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழுவில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நீர்ப்பாசனத் திணைக்களம், நெடுஞ்சாலைகள் அமைச்சு, விவசாய சேவைகள் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த திட்டம் குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
மத்திய மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் கீர்த்திரத்ன கூறினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.
குறுகிய கால திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 71 இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன. ஜாரு கால்வாய், களுகொடுவ கால்வாய், குண்டி கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களும் புனரமைக்கப்பட்டன. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையில் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டதாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார். அதற்காக செலவிடப்பட்ட தொகை 37 லட்சம் ரூபாய்களாகும்.
கம்பஹா பிரதேச செயலகப் பிரிவில் அடையாளம் காணக்கூடிய பிரதான அனர்த்தம் வெள்ளம் ஆகும். அத்தனகலு ஓயா நிரம்பி வழிவதால் அத்தனகலு ஓயாவை சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியமையே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த சில வருடங்களாக கம்பஹா நகரம் நீரில் மூழ்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக நாடு முழுவதும் 300 மில்லி மீற்றர்களை கடந்த மேல் பள்ளத்தாக்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் ஓடும் அத்தனகலு ஓயாவின் பிரதான கால்வாய்களான அலி ஓயா, உருவல் ஓயா, யாரு ஓயா, களு கால்வாய் மற்றும் குண்டிவில கால்வாய் அதே நேரத்தில் நிரம்பி வழிகிறது என்று மாகாண நீர்ப்பாசனப் பொறியாளர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் கம்பஹா நகரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு வெள்ளத்தினால் 19,860 குடும்பங்களைச் சேர்ந்த 80,411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 527 குடும்பங்களைச் சேர்ந்த 21,478 பேர் 5 பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இங்கு குறிப்பிட்டார். அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் முப்படை இராணுவம் பொலிஸ், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பன அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கம்பஹா நகரின் வைத்தியசாலை, பாடசாலைகள் மற்றும் ஏனைய கால்வாய்களில் உள்ள பிரதான பக்க வடிகால்கள் மற்றும் ஏனைய கால்வாய்களை இனங்கண்டு அவற்றிலிருந்து நீர் வெளியேறும் வகையில் விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் கூறினார்.
கம்பஹா மாவட்டத்தில் எத்தனை மில்லிமீற்றர் மழை பொழியும் என ஆராய்ந்து அதற்கு தீர்வு காண கம்பஹா மாவட்டத்திற்கு தனியான திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சஹன் பிரதீப் இங்கு கருத்து தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு, கம்பஹா மாவட்டத்தை வெள்ளத்தில் மூழ்க விடாமல் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களுடனும் இணைந்து கடந்த காலங்களில் பாரிய பணிகளை மேற்கொண்டதாகவும், இம்முறை நாடு முழுவதும் பெய்த கடும் மழையே வெள்ள நிலைமைக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
கம்பஹா நகரின் வடிகால் அமைப்பு மற்றும் கால்வாய் அமைப்பை அடைத்து பல சட்டவிரோதமான கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக கம்பஹா மாநகர ஆணையாளர் இங்கு குறிப்பிட்டார். வடிகால் அமைப்பில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாலும், நீர் விரைவாக வெளியேறாததாலும் கம்பஹாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி வடிகால் அமைப்பை சீரமைக்கவும், அவற்றில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் மாநகர ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு அரச நிறுவனங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்க வேண்டுமென அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்
2024.06.06
