(ரா.கமல்)
எஹெலியகொட தமிழ் வித்தியாலயத்தின் ஒரு மாபெரும் மக்கள் நலத்திட்டமாக கிளிநொச்சியை தளமாக கொண்டு இயங்கும் காவேரி கலாமன்றத்தின் அனுசரணையில் இருப்பிடம் வசதியற்ற எஹெலியகொட தமிழ் வித்தியாலய மாணவி செல்வி ஆகர்ஷாவிற்கு 19 லட்சம் செலவிலான புதிய வீடு கட்டப்பட்டு 2023/1/28ம் திகதி பாடசாலை அதிபர் ரா. தெய்வராஜ் தலைமையில், எஹெலியகொட பிரதேச செயலாளர், கிராம சேவகர், அரச உத்தியோகஸ்தர்கள், மற்றும் விஷேட விருந்தினர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பலருடைய பங்குபற்றலில் காவேரி கலாமன்ற பணிப்பாளர் வண யோசுவா அவர்களுடைய கரங்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 2023/1/29 ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தில் முதன் முறையாக செயல்பாட்டு இலக்கியம் புது படைப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது, இவ்விலக்கியம் பால்மரக்காடு எனும் பெயரில் ஒரு குறு நாவலாக பிரசவிக்கப்பட்டது. இக்குறுநாவல் வண.பெனி யோ சே அவர்களுடைய கைவண்ணத்தில், காவேரி கலாமன்றத்தின் பதிப்புரிமையில் இந்நூல் வெளியீடு சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில், புஸ்ஸல்ல மினேரிபிடிய ஆசிரியர் வள நிலையத்தில் இடம்பெற்றது. இந்நாவல் எஹெலியகொட தமிழ் வித்தியாலயத்தின் சமூக பங்களிப்பையும் மற்றும் இறப்பர் தோட்ட மக்களின் வாழ்வையும் அவர்களின் கல்வி நிலையையும் மலையக அபிவிருத்தியையும் கருவாக கொண்டு பாடசாலை சமூகத்தின் இறப்பர் தோட்ட மக்களின் நிஜ கதாபாத்திரங்களை உள்ளடக்கி படைக்க பட்டுள்ளது. இந்நாவல் வெளியீடு எஹெலியகொட தமிழ் வித்தியாலய அதிபர் ரா. தெய்வராஜ், மற்றும் மாகாண உதவி கல்வி பணிப்பாளரது தலைமையில், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் விஷேட விருந்தினர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியான மல்லியப்பு சந்தி திலகர் அவர்களது கரங்களால் இந்நூல் வெளியிடப்பட்டது, இதன் போது மாணவர்களின் மலையகம் தொடர்பான விவாதம்
மற்றும் கருத்தரங்கு நிகழ்வுகளுடன், இனிதே நிறைவு பெற்றது.