இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.
இது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என அரசாங்கம் ஏற்கனவே கொள்கை ரீதியான முன்மொழிவை முன்வைத்துள்ளது. இதற்கு இணையாக, தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சமூக ஊடகப் பயன்பாட்டையும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகத் தடையை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. அந்த நாடுகளின் முன்னுதாரணங்களைப் பின்பற்றி இலங்கையிலும் இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருவது குறித்து அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“பிள்ளைகள் இணையத்துடன் இணைவதன் மூலம் பல்வேறு ஒழுக்கக்கேடான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.” – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்.
சைபர் குற்றங்களைத் தடுக்கப் புதிய சட்டம்
சிறுவர்களுக்கு எதிரான இணையவழி (Cyber) குற்றங்களைக் கையாள்வதற்காகப் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரவைக்கும் 2025 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தத் தரவுகள் சிறுவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதத்திற்குள்ளாக்கியுள்ளன.
கடந்த ஆண்டு பதிவான முறைப்பாடுகளின் விபரம்:
வகை முறைப்பாடுகளின் எண்ணிக்கை
பாலியல் துன்புறுத்தல் 545
பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் 231
சைபர் வன்முறை (சிறுவர்களுக்கு எதிராக) 150
இளம் வயதுக் கர்ப்பம் 79
பாலியல் வல்லுறவு 38
தற்கொலை முயற்சி 20
சிறுவர் திருமணம் 09
மேலும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைப் பெற்றோர் கைவிட்டு வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் குறித்து 42 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான பின்னணியில், சிறுவர்களின் எதிர்காலப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
