கொழும்பு: இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு முறையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாலும், நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகிக்கப்படும் புதிய நடைமுறை:
புதிய விதிமுறைகளின்படி, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தைக் கருத்திற்கொண்டு இரண்டு பிரிவுகளாக எரிபொருள் வழங்கப்படவுள்ளது:
இரட்டை எண்கள் (Even Numbers): உங்கள் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6 அல்லது 8 ஆக இருந்தால், மாதத்தின் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: 2, 4, 6… 18, 20) எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒற்றை எண்கள் (Odd Numbers): உங்கள் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1, 3, 5, 7 அல்லது 9 ஆக இருந்தால், மாதத்தின் ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: 1, 3, 5… 19, 21) எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி, இன்றைய தினம் (மார்ச் 19) ஒரு ஒற்றை எண் திகதி என்பதால், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1, 3, 5, 7 மற்றும் 9 ஆக உள்ள வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கடந்த 16ஆம் திகதி முதல் QR முறையை மீண்டும் கட்டாயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது விநியோக நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த மேலதிக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
