கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய சவால்களைக் கருத்திற்கொண்டு, நாட்டின் உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவைகளைத் துல்லியமாகக் கண்டறியும் விசேட திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
உணவு விநியோகச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கும், எரிபொருள் விநியோகம் தொடர்பான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும்போது துல்லியமான தரவுகளைப் பயன்படுத்துவதையுமே இதன் மூலம் எதிர்பார்ப்பதாக வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
யார் பதிவு செய்ய வேண்டும்?
வேறு எந்தவொரு அமைச்சிலோ அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ இதுவரை பதிவு செய்யப்படாத போக்குவரத்து அல்லது விநியோகச் சேவையாளர்களை இலக்கு வைத்தே இந்தத் தரவு சேகரிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
ஏற்கனவே அரச முறைமைகளில் பதிவு செய்துள்ளவர்கள், தமது தரவுகளைச் சமர்ப்பிக்க உரிய உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள்:
உணவு விநியோகத் துறை முழுவதிலும் நிலவும் உண்மையான எரிபொருள் தேவையைக் மதிப்பீடு செய்தல்.
போக்குவரத்து சேவையாளர்கள் தற்போதைய சூழலில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிதல்.
சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முறையான பரிந்துரைகளை முன்வைத்தல்.
மேற்பார்வை மற்றும் நடவடிக்கை:
இந்தத் தரவுகள் தன்னார்வ அடிப்படையில் திரட்டப்படுகின்றன. இவை முழுமையாகப் பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குத் தேவையான பரிந்துரைகளாக வழங்கப்படவுள்ளன.
விபரங்களைச் சமர்ப்பிக்கும் முறை:
தொடர்புடைய தரவுகளைச் சமர்ப்பிக்க விரும்பும் போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவையாளர்கள், கீழே உள்ள கூகுள் படிவ (Google Form) இணைப்பின் ஊடாக விபரங்களை வழங்க முடியும் என அமைச்சு அறிவித்துள்ளது.
கூகுள் படிவ இணைப்பு: https://forms.gle/EPPu4bciG6onEptT9
