கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் இறக்குமதித் தடைகளை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் அரச நிறுவனங்களுக்குப் புதிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் நேற்று (23) இந்த விசேட அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முக்கிய வழிகாட்டல்கள்:
1. போக்குவரத்து முகாமைத்துவம்:
அரச அதிகாரிகள் தனித்தனி வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது குழுப் போக்குவரத்துச் சேவைகளைப் (Staff Service) பயன்படுத்த வேண்டும்.
களப்பணிகளுக்கான வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் முறையான தினசரி போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
2. மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகள்:
அலுவலகங்களில் மின்விளக்குகளுக்குப் பதிலாக இயற்கையான வெளிச்சத்தைப் பயன்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.
குளிரூட்டிகளின் (Air Conditioners) பயன்பாட்டைக் குறைத்து மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும்.
மின்தூக்கி (Lift) பயன்பாட்டைக் குறைத்து, படிகளைப் பயன்படுத்துவதை ஊழியர்களிடையே ஊக்குவிக்க வேண்டும்.
பகல் நேரங்களில் அலுவலகங்களிலுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டும்.
3. வீதி மின்விளக்குகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள்:
அதியுயர் பாதுகாப்பு வலயங்களைத் தவிர ஏனைய வீதிகளில் தற்காலிக தீர்வாக மின்விளக்குகளை அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை உள்ளூராட்சி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
4. இணையவழிச் சேவைகள் (Online Services):
தொழில்நுட்ப வசதிகள் காணப்படும் பட்சத்தில், பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்காமல் இணையவழி ஊடாகச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் (வார இறுதி நாட்கள் உட்பட) அலுவலகங்களை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5. பொதுமக்களுக்கான கோரிக்கை: இதேவேளை, நாட்டின் மின்சாரத் தேவையைச் சீராகப் பேணுவதற்காக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பிற்காக அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

