ஹல்துமுல்லையில் மது அருந்திய மாணவர்கள்: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
பதுளை,ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் 16 வயதுடைய மாணவர்களில் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹல்துமுல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஒன்றிணைந்து மது அருந்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மது அருந்தியதாகக் கூறப்படும் நான்கு மாணவர்களில் ஒருவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் உடனடியாக ஹல்துமுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதேவேளை, ஏனைய மூன்று மாணவர்களும் ஹல்துமுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் நான்கு பேரும் மது அருந்தியிருந்ததாகத் தகவல் கிடைத்துள்ள போதிலும், அது தொடர்பான மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹல்துமுல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
