தெஹிவளை பகுதியில் கூர்மையான ஆயுதங்களுடன் வர்த்தக நிலையமொன்றுக்குள் நுழைந்த ஆறு பெண்கள் அடங்கிய கொள்ளையர் கும்பல், ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கி 13 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 4ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றைக் கொள்வனவு செய்யப் போவதாகக் கூறி குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். அதற்காக 45,000 ரூபா பணத்தை காசாளரிடம் வழங்கியுள்ளனர்.
தொலைக்காட்சியைப் பரிசோதிப்பதில் ஏற்பட்ட சிறிய தாமதத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர்கள், ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் தாம் வழங்கிய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
வெளியேறிய சில நிமிடங்களிலேயே, அந்த ஆணும் பெண்ணும் மேலும் பல ஆண்களையும் பெண்களையும் (மொத்தம் 10 பேர், இதில் 6 பேர் பெண்கள்) அழைத்துக்கொண்டு மீண்டும் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இரும்புத் தடிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கிய கும்பல், பையொன்றில் வைக்கப்பட்டிருந்த 1,309,000 ரூபா பணத்தைச் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
கொள்ளையர்கள் அனைவரும் ரயில்வே வீதி வழியாக கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தின் முழுமையான காட்சிகள் வர்த்தக நிலையத்திலிருந்த CCTV கேமராவிலும் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
