இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மேலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும்.
அதேவேளை, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
