தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்தி “புத்த ரஷ்மி” வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயக் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்த இறுதிக்கட்டக் கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் நடைபெற்றது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போதே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த சில விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து இதன்போது அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும், நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதற்கும் நியமிக்கப்பட்ட விசேட குழுக்களின் அதிகாரிகள் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர்,”குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், கொள்கை வழிபாட்டிற்கு (Pratipatti Pooja) முதலிடம் வழங்கி, ஆமிச வழிபாட்டின் (Aamisa Pooja) மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் இம்முறை வெசாக் வலய அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மின்சாரச் சிக்கனத்தைக் கருத்திற்கொண்டு, இம்முறை வெசாக் வலயம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும் கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை வெசாக் வலய நிகழ்வுகள் கொழும்பு கங்காராம விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரிமாளிகை வளாகங்களை அண்மித்த பகுதிகளில் பக்திப் பூர்வமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
