பாராளுமன்ற வளாகத்தில் உள்ள ரணவிரு (போர் வீரர்கள்) நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பட்ட சர்ச்சை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்று (25) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள ரணவிரு நினைவுத் தூபி வளாகத்தில், அடுத்த நாள் நடைபெறவிருந்த பிரதான விழாவிற்கான ஒத்திகை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன்போது அங்கு சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், ஒத்திகை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸாரின் கடமைகளைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (25) திங்கட்கிழமை காலை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு விமல் வீரவன்ச சமூகமளித்திருந்தார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சற்று முன்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த 19ஆம் திகதி பிரதான ரணவிரு நினைவு தின விழா திட்டமிட்டபடி நடைபெற்றது.
அதற்கு முதல் நாளான 18ஆம் திகதியன்று, விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் இந்த நினைவுத் தூபி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்ட வேளையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் முண்டியடிப்பு ஏற்பட்டது. பொலிஸாரின் தடைகளை மீறி ஓட முயன்ற விமல் வீரவன்ச, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி குப்புற விழுந்து குட்டிக்கரணம் அடித்தார் என்பதும், இது தொடர்பான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
