நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அந்தப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 67,174 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் பாரியளவிலான அதிகரிப்பு பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஜூலை மாதத்தின் முதல் 09 நாட்களில் மாத்திரம் 10,685 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று (10) ஒரே நாளில் மாத்திரம் சுமார் 1,110 புதிய டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதன் காரணமாக, நாட்டின் பல முக்கிய வைத்தியசாலைகளின் கொள்ளளவு தற்போது அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் விளைவாக, வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடியும், இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பதுடன், டெங்கு பரவக்கூடிய இடங்களை உடனடியாக அழிக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
