இந்திய அரசின் சர்வதேச பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றார் நுவரெலியா மாவட்ட தோட்ட அமைப்பாளர் ஹரீஷ் ரவீந்திரன்
இந்தியாவின் வெளிநாட்டு விவகார அமைச்சகம் மற்றும் தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (NIESBUD) இணைந்து நடத்திய “அமைப்பின் வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமையியல்” (ILOGE) என்ற சர்வதேச பயிற்சி முகாமில், நுவரெலியா மாவட்ட SLPP அமைப்பாளரும், இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பிரதிநிதியுமான ஹரீஷ் ரவீந்திரன் வெற்றிகரமாகப் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஜூலை 13 முதல் 17 வரை இந்தியாவின் நியூடெல்லியில் நடைபெற்ற இந்த ஐந்த நாள் தீவிர பயிற்சித் திட்டத்தில், தலைமைத்துவப் பண்புகள், உலகளாவிய பார்வை மற்றும் சமூக மேம்பாட்டிற்கான நடைமுறை உத்திகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த அரிய வாய்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஹரீஷ் ரவீந்திரன்:
“இந்த சர்வதேச பயிற்சித் திட்டம் எனது தலைமைத்துவத் திறனை மேம்படுத்திக்கொள்ளப் பெரும் உதவியாக இருந்தது. இத்தகைய உயர்மட்ட பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பளித்த எமது தேசிய அமைப்பாளர் மாண்புமிகு நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பயிற்சியின் மூலம் பெற்ற அறிவு மற்றும் அனுபவங்களை, நுவரெலியா மாவட்ட தோட்ட சமூகத்தின் மேம்பாட்டிற்கும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்,” எனத் தெரிவித்தார்.
எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், நுவரெலியா மாவட்டத்தில் விளையாட்டு மற்றும் கல்வித் துறைகளை வலுப்படுத்துவதோடு, அனைத்து சமூகங்களுடனும் இணைந்து நிலையான அபிவிருத்தியை முன்னெடுக்கவும், வருங்கால சந்ததியினருக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவும் உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாவட்டத்தின் மேம்பாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் அவர் விடுத்துள்ளார்.

