தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த 10% உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உட்பட 60 வர்த்தக கூட்டாளி நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா 10% மற்றும் 12.5% புதிய வரிகளை விதிக்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தினால் (USTR) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நாடுகளை இலக்கு வைத்து அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்புத் தடைச் சட்டங்களைச் சரியாக அமுல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய:
10% வரி விதிக்கப்படும் நாடுகள்: இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், கனடா, மெக்சிகோ, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா, ஆர்ஜென்டினா, பிரித்தானியா, ஈக்வடோர், குவாத்தமாலா, ஒண்டுராஸ், ஜோர்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ.
12.5% வரி விதிக்கப்படும் நாடுகள்: சீனா உட்பட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5% வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் தாய்வான் போன்ற பிராந்தியங்களுக்கும் அவற்றுக்குரிய விசேட நிபந்தனைகளின் கீழ் புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னணி மற்றும் காரணம்
அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட 10% முதல் 50% வரையிலான வரிகளை கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122 இன் கீழ் 150 நாட்களுக்கு தற்காலிகமாக 10% வரியை விதித்திருந்தார். இந்த 150 நாட்கள் நிறைவடையும் நிலையிலேயே, தற்போது பிரிவு 301 இன் கீழ் (Section 301) இந்த புதிய வரிக்கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரி என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வெள்ளை மாளிகை முன்னெடுத்துள்ள புதிய முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.
