நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு 65 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற காலநிலை நிலவரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாவலப்பிட்டி பகுதியில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.
