கலவானை – டிப்டீன் தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம்: 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அடிக்கல் நாட்டு விழா!
‘வளமான நாடு அழகான வாழ்க்கையை“ நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்த செயற்பாடுகளுக்கு தலைமைத்துவம் வழங்கும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
கலவானை -டிப்டீன் தமிழ் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, (03.082026) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவி்த்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நில தாழ்விறக்கம் காரணமாக பாதிப்புக்குள்ளான குறித்த பாடசாலையானது, கடந்த 5 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில், தோட்ட கோவிலிலேயே இயங்கி வந்தது.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினுடன் இந்த பாடசாலைக்காக காணி ஒதுக்கப்பட்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு, அனுமதியுடன் புதிய இரண்டு மாடி கட்டிடத்திற்காக 300 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆரம்ப பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்,
எனவே, “புதிய கட்டிடத்தின் மூலம் சிறந்த கல்வியைப் பெற்று நாட்டுக்கு சிறந்த பிரஜையாக விளங்க வேண்டும். இன்று எமது அரசாங்கம் முன்னெடுக்கின்ற பணிகள் மக்கள் சார்ந்த பணிகளாக உள்ளதுடன், நாளுக்கு நாள் இந்த நாடு அபிவிருத்தியை நோக்கி செல்கின்றது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன அவர்களும் கலந்துகொண்டதுடன், கலவானை பிரதேச சபையின் தவிசாளர் பிரியந்த சுமித் சோமதாஸ,பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண உதவி கல்வி பணிப்பாளர் சண்முகநாதன், வலய கல்வி பணிப்பாளர், பிரதேசத்திற்குரிய பொறியியலாளர், அயல் பாடாலை அதிபர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

