ஜனாதிபதி நிதியத்தின் மூலம் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபை நிதி அனுசரணை
குறைந்த வருமானம் பெறும் லொத்தர் விற்பனை முகவர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் கல்வி உதவித்திட்டத்திற்கு தேசிய லொத்தர் சபையினால் இன்று (06) நிதியுதவி வழங்கப்பட்டது.
இதற்குரிய காசோலையை தேசிய லொத்தர் சபையின் தலைவர் எம். டி. சிரில் அண்டன் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகேவிடம் கையளித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபையின் அங்கீகாரத்திற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் ஆகஸ்ட் 23ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
லொத்தர் விற்பனையின் மூலம் ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில்,லொத்தர் விற்பனை முகவர்களுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு ஏற்கனவே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-08-06
