அதிக எண்ணிக்கையிலான அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நுவரெலியா, நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும நிதி மோசடி 162 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விவகாரத்தில் அலுவலகத்தைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இது குறித்து விரிவான விசாரணை கோரி நோர்வூட் பிரதேச செயலாளர் சமீரா கம்லத், ஹட்டன் காவல் பிரிவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முன்னதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகள் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோனுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த பிரம்மாண்ட மோசடி அம்பலமானது.
சந்தேக நபர்கள் பயனாளிகளின் நிதியைத் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கணக்குகளுக்கு மாற்றியதுடன், தனிப்பட்ட கடன்களாக வழங்கி வட்டியின்றி மாதாந்திரத் தவணைகளை வசூலித்து வந்துள்ளமையும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும, சமுர்த்தி உள்ளிட்ட அனைத்து அரசு மானியங்களும் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய சிறப்புத் தணிக்கைக் குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுளா சுரவீராராச்சி தெரிவித்துள்ளார். (செய்தி: செ.தி.பெருமாள்)
