வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம், கிளிநொச்சி, அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

வினைதீர்த்து அருள் வழங்கும் விநாயகரே
வீரமிகு மனவுறுதி எமக்களிக்க வாருமைய்யா
வெற்றிகளை நாம் பெற்று தலை நிமிர்ந்து வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

மலைத்து நிற்போர் மனக்கவலை தீர்த்தருளும் விநாயகரே
மாற்றமில்லா நல்வாழ்வை எமக்கருள வாருமைய்யா
தீரமிகு எதிர்காலம் பெற்று நாம் உயர்வாழ்வு வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

வட இலங்கை வந்தமர்ந்து உலகிற்கு அருள் பொழியும் விநாயகரே
பகையின்றி பசியின்றி வாழவழி செய்ய வாருமைய்யா
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வளமுடனே வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே

துரத்தி வரும் துன்பங்களை தூர விலக்கும் விநாயகரே
தொல்லையின்றி துன்பமின்றி வாழும் வழி தாருமைய்ய
நேர்வழியில் நிறை வாழ்வு வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே
அறிவு தந்து ஆற்றல் தந்து வழிநடத்தும் விநாயகரே
அச்சமின்றி அல்லலின்றி வாழும் வழி தாருமைய்யா
அஞ்சாத மனம் கொண்டு தலைதாழா வாழ்வு வாழ்வதற்கு
ஏற்ற வழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே
சிந்தையிலே உறைந்திருந்து சீர் வாழ்வு தருகின்ற விநாயகரே
சீருடனும் சிறப்புடனும் வாழ வழி தாருமைய்யா
நெஞ்சமதில் நிம்மதியை சுமந்து நாம் வாழ்வதற்கு
ஏற்றவழி காட்டுமைய்யா கிளிநொச்சி கோயில் கொண்ட சித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
