நேற்று நடைபெற்ற லக்னோ – பெங்களூரு இடையேயான போட்டியில் மைதானத்தில் வார்த்தை மோதலில் ஈடுபட்டமைக்காக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐ.பி.எல். நடத்தை விதிகளை மீறியமைக்காக இருவருக்கும் போட்டி கட்டணத்திலிருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்க ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன உல் ஹக்கிற்கும் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்றைய 43 ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
லக்னோ தரப்பில் அந்த அணியின் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை அதிகப்படியாகக் கைப்பற்றினார்.
127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இதன் மூலம் லக்னோவை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வீழ்த்தியது.
போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இதனால், மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோலி – கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றனர். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது.
மைதானத்தில் கோலியும், கம்பீரும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கும், கோலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
