வன்னியை தளமாக கொண்டு செயற்படும் மாற்றுவலுவுள்ளோருக்கான வலுவூட்டல் அமையம் (VAROD), வட இலங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளும் கிரிக்கெட் விளையாட்டினை அணுகும் நோக்கிலும், தேசிய மட்டத்திலான மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்ககூடிய ஓர் ஆற்றல்மிக்க அணியினை உருவாக்கும் நோக்குடனும் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் தமது தொடர் முயற்சிகளை மேற்கொண்ட அணிக்கு இப்போது வெற்றியொன்று கிடைத்துள்ளது.

VAROD அமையத்தின் விளையாட்டு கழகமானது, இம்மாத இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள சக்கரநாற்காலி கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட தேசிய குழுவினை உருவாக்குவதற்கான தேர்வில் பங்கேற்பதற்காகவும் உள்ளக போட்டியில் கலந்து கொள்வதற்காகவும் தேசிய பராலிம்பிக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன் ஆயத்த பயிற்சிகள் வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 16-05-2023 அன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சியோடு தம் இலக்கை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கும் VAROD அமையத்தின் விளையாட்டு கழகத்துக்கு கிரிக்கட் பயிற்சிகளுக்கும், வீரர்களின் உபகரணங்களுக்குமான உதவிகள் தேவைப்படுகின்றன.

அடிப்படை வசதிகளை கொண்டு வளர்ந்துவரும் இந்த அணியை தேசிய மட்டத்தில் வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
தொடர்புகளுக்கு: ரத்னா +94 76 602 8722

