வடமத்திய மாகாணம் – பொலன்நறுவை மாவட்டம் – பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்

சோழத் தமிழ் மன்னர் ஆட்சி செய்த பூமி
சோதனைகள் பல கண்ட தமிழர் வாழும் பூமி
சோர்வகற்றி வாழவைக்கும் விநாயகர் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி
இராஜேந்திர சோழன் ஆட்சி செய்த பூமி
இதயத்தில் விநாயகர் எழுந்தருளும் பூமி
இன்னல் களைந் தெம்மை வாழவைக்கும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி
சித்திகள் தந்தருளும் சித்திவிநாயகருறை பூமி
சீர்மைமிகு நல்வாழ்வைத் தந்தருளும் பூமி
சீறிவரும் கொடும் பகையை அடக்கி விடும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி
நாற்புறமும் செழிப்புடைய மருதநிலப் பூமி
நம் தமிழர் வாழுகின்ற நலமளிக்கும் பூமி
நெறி தவறா வாழ்வு தரும் ஐயன் உறை பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி
எழுச்சி தரும் விநாயகர் வந்துறையும் பூமி
எட்டுத்திக்கும் அருளிடுவோன் உறைகின்ற பூமி
ஏற்றமிகு நல்வாழ்வை வழங்குகின்றோன் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி
பார்வதியின் புத்திரனார் உறைகின்ற பூமி
பரிதவிப்போர் மனக்குறையைத் தீர்க்கின்ற பூமி
பெற்றவர்க்கு உயர்வு தந்தோன் இருந்தருளும் பூமி
செவனப்பிட்டி விநாயகர் கோயில் கொண்ட பூமி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
