மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.07.08.2023.
– மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ராஜ் அசோக் கேள்வி –
மலையக அதிகார சபையை வர்த்தமானியில் அறிவித்தும் இன்னும் நடைமுறை படுத்தாமல் இருப்பது ஏன்? என மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) சட்டமூலம் பற்றி நாம் அனைவரும் கட்டாயம் அறிந்துவைத்துகொள்ளவேண்டும்.
மலையகப் பகுதிகளில் நிர்வாகக்கட்டமைப்பு என்பது உரிய வகையில் செயற்படாததற்கு இத்தகையதொரு சபையின்மையும் பிரதான காரணமென்றுகூறலாம். மலையக மக்களின் நலன்கருதி வழங்கப்படும் நிதியுதவிகள்கூட கட்சிசார்ந்த கணக்குகளிலேயே வைப்பிலிடப்பட்டன. உறுதிவகையில் கணக்கு காட்டப்படுவதுமில்லை. இருக்கின்ற ஒரு நிதியமும் ‘குடும்பநலன்’ சார்ந்ததாகவே இருக்கின்றது.
பெருந்தோட்டப் பிராந்தியத்தில் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திமூலம் பெயர் குறிக்கப்பட்ட இடப்பரப்புகளிலுள்ள பெருந்தோட்டச் சமுதாயத்தினரைச் சமூக நீரோட்டத்தினுள் சேர்ப்பதனை உறுதிப்படுத்தல்.
பெருந்தோட்டச் சமுதாயத்தினர், தேசிய அபிவிருத்திச்செய்முறைக்குப் பங்களிப்பதனை இயலச் செய்யும் பொருட்டு சமுகரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்களுக்குத் தத்துவமளித்தல்.
அதிகாரசபையானது, இச்சட்டத்தின்கீழான அதன் தத்துவங்களையும், கடமைகளையும், பயணிகளையும் பயனுள்ள வகையில் பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அதனை இயலச்செய்வதற்கு – ஓர் அரசாங்கத் திணைக்களம், உள்ளுரதிகாரசபை, ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம் அல்லது வேறெதேனும் தனியார் அல்லது பகிரங்க நிறுவனம் உள்ளடங்கலாக எவரேனுமாளுடன் ஒப்பந்தங்களை அல்லது உடன் படிக்கைகளை செய்துகொள்ளுதல்.
இலங்கையினுள் அல்லது இலங்கைக்கு வெளியேயுள்ள ஆட்களிடமிருந்து அல்லது ஆட்கள் குழுக்களிடமிருந்து காசாக அல்லது வேறுவகையாக மானியக்கொடைகளை, கொடைகளை அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்பதுடன், இச்சட்டத்தின்கீழான அதன் பணிகளை நிறைவேற்றுவதிலும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக்கூடியவாறாக ஏதேனும் அரச வங்கியில் அல்லது அரச நிதி நிறுவனத்தில் நடப்பு, சேமிப்பு அல்லது வைப்புக் கணக்குகளைத் திறந்து பேணலாம்.
அதிகாரசபையின் நோக்கங்களுக்காக உடனடியாகத் தேவைப்படாத எவையேனும் நிதிகளை அரச வங்கிகளிலும் அரச நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யலாம்.
அத்துடன் அதிகாரசபையின் பணிகளாக,
1. அமைச்சரின் கலந்தாலோசனையுடன் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தின் திட்டங்களையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் அமுலாக்குதல்.
‘
2. ஆதிகாரசபையின் குறிக்கோள்களை எய்துமுகமாகப் பணியாற்றுகையில் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள வேறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்ட அமுலர்கல் முகவராண்மைகளுடன் ஒருங்கிணைத்தல்.
3. புதிய கிராமங்களின் அபிவிருத்திக்காக அரசாங்கத் திட்டங்களையும், நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் பெயர்குறிக்கப்பட்ட இடப்பரப்புகளில் வகுத்தமைப்பதிலும் அமுலாக்குவதிலும் பெருந்தோட்டப் பிராந்தியத்திலுள்ள சமூதாய அடிப்படையிலான ஒருங்கமைப்புகளின் பங்குபற்றுகையை உறுதிப்படுத்தல்.
4. தோட்டங்களிலுள்ள வீடுகளின் சட்டப்படியான இருப்பாட்சியாளர்களுக்கு அத்தகையை வீடுகளின் சொத்தாண்மையை வழங்குவதற்காக அவர்களுக்கு உரித்துறுதிகள் வழங்கப்படுவதனை வசதிப்படுத்தல்.
5. இளைஞர்களுக்கு, அவர்களின் கல்வி அபிவிருத்திக்காக மூன்றாம்நிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு உதவி வழங்குதல்
போன்ற பல்வேறு நன்மைகள் உள்ள மலையக அதிகார சபையை ஏன் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
