உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உண்மைகளை வெளிப்படுத்தியது.
இதற்கமைய, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த நபர்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட கருத்துக்கள் நீதித்துறையின் மீதான அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
அத்துடன், தொடர்புடைய ஊடக நிகழ்ச்சிகளின் காணொளிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
