செ.திவாகரன்
கொட்டகலை பிரதான நகரில் சிசிடிவி கேமரா இல்லாததால் விபத்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து அறிய முடியாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் சுலபமாக தப்பி வருகின்றனர் பொது மக்களின் பாதுகாப்புக்காகவும், குற்றச் செயல்களைக் கண்காணிக்கவும் வரப்போகும் தீபாவளியை முன்னிட்டு கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில்
தற்போது முதல்கட்டமாக கொட்டகலை நகர் முழுவதிலும் சுமார் 32 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடர் கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தான ஆலய மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது தீபாவளியை இலக்கு வைத்து பல்வேறு தீர்மானங்கள் இக்கலந்துரையாடலில் இடம்பெற்றது. குறிப்பாக கொட்டகலை நகரில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வருவதால் அதை தடுக்கும் முகமாக நகர வர்த்தகர்களின் பங்களிப்பில் 32 சிசிடிவி கேமாராக்களை நகரம் முழுவதும் பொருத்தவும் அதனை 24 மணித்தியாலமும் கண்காணிக்க திம்புள பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக திம்புளை பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதை தவிர இக்கலந்துரையாடலில் அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்று கொட்டகலை நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடவேண்டுமெனவும் ,கல்வி தரத்தை அதிகரிக்கவும்,நகரில் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றவும் மற்றும் மேலதிக வகுப்புக்கு செல்லும் மாணவர்களை கண்காணிக்க புதிய குழு உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட கொட்டகலை சுகாதார பரிசோதகர்,திம்புள பத்தனை பொலிஸ் அதிகாரி உட்பட நகரில் ஏராளமான வியாபாரிகளும் கலந்துகொண்டனர்.

