இலவச அரிசியை வழங்கவில்லை எனக் கூறி பெண் கிராம சேவகர் ஒருவரை தாக்கிய பெண்ணொருவரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 28 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பனாப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் பதில் கிராம சேவகராக பணியாற்றிய பனாப்பிட்டி வடக்கு கிராம சேவகரே இவ்வாறு தாக்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (04)கிராம சேவகர் அரிசி விநியோகம் செய்து முடித்துவிட்டு அலுவலகத்தை மூடிவிட்டு செல்ல முற்பட்ட போது சந்தேகநபரான பெண் வந்து ஏன் அரிசி கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
அதே வீட்டில் வசிக்கும் தாய்க்கு அரசி வழங்கப்பட்டதால் அவருக்கும் அரிசியை வழங்க முடியாது என கிராம சேவகர் கூறியதையடுத்து குறித்த பெண் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் கிராம சேவகரை திட்டி சம்பவத்தை கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனை எதிர்க்கும் விதமாக அவரின் அருகில் சென்ற போது சந்தேகநபரான பெண் தன்னை தாக்கியதாக சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த கிராம சேவகர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (05) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
