அரசாங்கத்தை மாற்றுவதற்காக மீண்டுமொரு போராட்டத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை.
அத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே அதனை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் முதல் நாளான நேற்று (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
எமது நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. அதை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். அதுவரையிலும் நான் பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை. இன்றும் அதே பழைய முகங்கள் தான் உள்ளன. இதில் மாற்றத்தை ஏற்படுத்தவே இளைஞர்கள் முயற்சிக்கின்றனர்.
22வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எதிர்காலத்தில் வரவு செலவுத்திட்ட அலுவலகம் திறக்கப்படும். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலம் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும். துறைசார் குழுவுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்காக ஐவரின் பெயர்களை டிசம்பர் மாத இறுதிக்குள் முன்மொழியுமாறும் ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
நான் அதிகாரப்பகிர்வை விரும்புகிறேன். அதிகாரப் பகிர்வுக்கு நான் சம்மதிக்கிறேன். ஏதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்பாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். எதிர்வரும் 8ஆம் திகதி விவாதத்திற்குப் பிறகு இந்தப் பிரசசினை தொடர்பாக அனைவரும் கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்தப் பிரச்சினைகள் வடக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல என்றும் குறிப்பிட்டார்.