எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில், லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 100 வகையான பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்
சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
விலை விபரங்கள் (ஒரு கிலோகிராம்):
வெள்ளை நாடு: ரூ. 217
வெள்ளைப்பச்சை அரிசி: ரூ. 203
கோதுமை மா: ரூ. 254
பருப்பு: ரூ. 264
பெரிய வெங்காயம்: ரூ. 150 – 160
நெத்தலி: ரூ. 1,050
நிபந்தனைகள் மற்றும் கொள்வனவு வரம்பு
இந்த விலைக்கழிவுச் சலுகையானது சாதாரண நுகர்வோரைச் சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு பொருளுக்கும் கொள்வனவு வரம்பு (Limit) விதிக்கப்பட்டுள்ளது. “இந்தச் சலுகை பொதுமக்களுக்கானதே அன்றி, வியாபாரிகள் மொத்தமாக கொள்வனவு செய்வதற்கானது அல்ல” என அமைச்சர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிர்ஷ்டலாபக் குலுக்கல்: கார் வெல்லும் வாய்ப்பு
விலைக்கழிவுகளுக்கு மேலதிகமாக, சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய பரிசுத் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
“சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்யும் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்டலாபக் குலுக்கலுக்கான கூப்பன் ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் சதொசவிற்கு பொருட்கள் வாங்க வருபவர்கள், ஒரு காரையோ அல்லது மோட்டார் சைக்கிளையோ பரிசாகப் பெற்று வீடு திரும்பும் வாய்ப்பு உள்ளது” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
