ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகப் பயணிக்கும் சர்வதேசக் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஈரான் பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டமூலம் தயார்
ஈரான் பாராளுமன்றத்தின் சிவில் விவகாரக் குழுவின் தலைவரை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, இதற்கான விசேட சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சட்டத்துறையினால் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்புக்கான கட்டணம்
இது குறித்து அந்த அதிகாரி மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“இந்தத் திட்டத்தின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை ஈரான் உறுதிப்படுத்துவதால், அதற்காகக் குறித்த கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இது ஒரு சாதாரண நடைமுறையாகும்.”
சர்வதேச ரீதியில் ஏனைய போக்குவரத்து வழிகள் மற்றும் நிலப்பரப்பு ஊடாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது வரி வசூலிக்கப்படுவது போலவே, ஹோர்முஸ் நீரிணையும் ஒரு முக்கிய வழிப்பாதை என்பதால், அங்கு பாதுகாப்பை வழங்கும் ஈரானுக்குக் கப்பல்களும் எண்ணெய் தாங்கிகளும் கட்டணம் செலுத்துவது நியாயமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் நிபந்தனை
தற்போதைய பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் முன்வைத்துள்ள ஐந்து முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக, “ஹோர்முஸ் நீரிணை மீது ஈரான் தனது அதிகாரத்தைச் செலுத்துவதற்கான உரிமையைச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்” என்பது உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
