நாட்டின் சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடியைக் குறைப்பதற்கும், நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, காலி – மஹமோதர மற்றும் பழைய போகம்பரை ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.
காலி, மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் கடந்த 07 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இது குறித்து நீதி அமைச்சு தெரிவிக்கையில், மூடப்பட்ட மஹமோதர வைத்தியசாலையின் ஒரு பகுதியை தற்காலிக சிறைச்சாலையாகப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மைக்காலமாக சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் நிர்வாக நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகம்
இதேவேளை, பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலையை நிறுவுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 54 ஆம் உறுப்புரையில், அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடிகளைத் தீர்க்க பல்வேறு கொள்கை மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 10,000 கைதிகளைத் தங்க வைப்பதற்கான மேலதிக கட்டுமானப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும், வீட்டுச் சிறை வைப்பு (House arrest) தொடர்பான சட்டமூலத்தை உருவாக்குவதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
