இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது-பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன்.
இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக தொழிலாளர் தேசிய முன்னணி மறுசீரமைக்கப்பட்டு வருகிறது என பிரதி பொதுச் செயலாளர் சுப்பையா கமலதாசன் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்திற்கான அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே தெரிவித்துள்ளார். அவர் மேலும் உறையாற்றும்போது,
நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்ததாக மலையக மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம் பதுளை மாவட்டமாகும். அதனடிப்படையில் தொழிலாளர் தேசிய முன்னணி பதுளை மாவட்டத்தில் அரசியலுக்கு நுவரெலியா போன்றே பதுளைக்கும் சம வாய்ப்பு வழங்கியுள்ளது. கட்சி பதிவுக்கு முன்பதாகவே அரசியல் உயர்மட்ட குழுவில் பதுளை பிரதிநிதித்துவப்படுத்தி வாய்ப்பு வழங்கியது. அதன்பின்னர் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் அதற்கான முக்கியத்துவத்தினை வழங்கியது. ஆனால் பதுளை மாவட்டத்திற்கான மக்கள் பிரதிநிதி உங்களில் இருந்து வர வேண்டுமே தவிர இறக்குமதி செய்யப்படகூடாது என்பதே தலைவரின் எதிர்ப்பார்ப்பாகும். அதற்கான முயற்சிகளையே கட்சியாகவும், கூட்டணியாகவும் முன்னெடுத்து வருகின்றோம்.
பதுளை மாவட்டத்தில் 18 உள்ளூராட்சி மன்றங்களில் 218 வட்டாரங்கள் காணப்படுகின்றன. அனைத்து வட்டாரங்களுக்குமான அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அதனொரு கட்டமாகவே பதுளை மாவட்டத்திற்கான பிரதான அமைப்பாளர்களாக இருவரும், உள்ளூராட்சி மன்ற தொகுதிக்கான அமைப்பாளர்களாக 10 பேரும் நியமிக்கப்படுகின்றீர்கள். இதேபோன்று ஏனைய தொகுதிகளுக்கும் அமைப்பாளர் நியமனங்கள் இடம்பெறும்.
தேர்தலுக்காகவும், விளம்பரத்திற்காகவும் உங்களை அமைப்பாளர்களாக நியமனம் செய்துவிட்டு பின் அரசியல் அநாதையாக்கும் அமைப்பு தொழிலாளர் தேசிய முன்னணி இல்லை. இன்றைய தலைமுறைக்கான அரசியல் அமைப்பாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. தொழிலாளர்களை மையப்படுத்திய தொழிற்சங்க பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதோடு தொழிலாளர்கள் அல்லாத வகுதியினருக்குமான அரசியல் கட்டமைப்புக்களை உருவாக்கி வருகின்றது. விரைவில் அதனை மக்கள்மயப்படுத்த உள்ளோம்.
பதுளை மாவட்டத்திற்கான தலைமையினை உங்களிலிருந்து உங்கள் ஒத்துழைப்போடு எதிர்காலத்தில் உருவாக்கவே கட்சி செயற்படுகிறது. எனவே அமைப்பாளர்களாக நியமனம் பெற்ற அனைவரும் தங்களுக்கான அரசியல் இருப்பை இந்த அமைப்பினூடாக உறுதி செய்துக்கொள்வதோடு, எமது பதுளை மாவட்ட அரசியல் செயற்பாடுகளில் பங்குதாரர்களாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
