ஹட்டனில் அதிரடிச் சோதனை: சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்தோருக்கு எதிராக வழக்கு!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஹட்டன் நகர் பகுதிகளில் மக்கள் புத்தாண்டு கொள்வனவுகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இன்று (07) விசேட அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் சுகாதாரப் பிரிவினர் இணைந்து இந்த திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன் பொது சுகாதார விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பேக்கரி உணவகங்கள் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய வகையில் உணவுப் பொருட்களைக் கையாண்ட பல வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
குறிப்பாக கலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை.
* சுற்றுச்சூழல் மற்றும் சமையலறைகள் அசுத்தமாக காணப்பட்டமை.
* உணவுப் பாதுகாப்பு சட்டங்களை முறையாகப் பின்பற்றாமை போன்றவை கண்டறியப்பட்டன.
ந்தச் சோதனையின் போது உணவுச் சட்டத்தை மீறிச் செயற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அம்பகமுவ சுகாதார காரியாலய அதிகாரிகள், சுகாதார நடைமுறைகளை அலட்சியம் செய்த வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அறிவித்துள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்கவும், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
