புறக்கோட்டை “புநக்கோட்டை” ஆனது! – அரச பதாகைகளில் தொடரும் தமிழ் மொழிச் சிதைப்பு: மக்கள் விசனம்..சமூக ஊடகங்களில் நேற்று முதல் பெரும் விமர்சனத்திற்குள்ளான இந்த விடையம்.
நீண்ட கால புனரமைப்பிற்குப் பின்னர் இன்று (08-04-2026) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பெயர்ப்பலகைகளில் மலிந்து கிடக்கும் தமிழ் எழுத்துப் பிழைகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரச நிதியில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அடிப்படைத் தமிழ் எழுத்துக்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது அரசின் மெத்தனப் போக்கையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
மத்திய பேருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திரைப்பலகை மற்றும் அறிவிப்புப் பலகைகளில் சுமார் ஐந்து இடங்களில் பாரிய எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன:
1. **புறக்கோட்டை** என்பது **”புநக்கோட்டை”** என அச்சிடப்பட்டுள்ளது.
2. **கிளீன் (Clean)** என்பது **”கீளீன்”** என தவறாக எழுதப்பட்டுள்ளது.
3. **ஒத்துழைப்பு** என்பதில் **”ழை”** எழுத்து பிழையாக உள்ளது.
4. **தொழில்நுட்பம்** என்ற சொல்லில் **”ழி”** என்ற எழுத்து இரண்டு இடங்களில் பிழையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிகாரிகளின் தவறா?**
கடந்த காலங்களில் இந்தியப் பிரதமர் மோடியின் வருகையின் போது வைக்கப்பட்ட பதாகைகள் முதல், தற்போது என்.பி.பி (NPP) ஆட்சியின் கீழ் நடைபெறும் அரச நிகழ்வுகள் வரை தமிழ் மொழித் தவறுகள் தொடர்கதையாகி வருகின்றன. இவை தற்செயலாக நடப்பவை என்பதைத் தாண்டி, திட்டமிட்டுத் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
“அரச பணத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளில் மொழிபெயர்ப்பு மற்றும் சரிபார்ப்புப் பணிகளுக்கு என தனியான அதிகாரிகள் இருந்தும், இத்தனை பிழைகள் எப்படி வெளியுலகிற்கு வந்தன?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிழைகளை வெறும் விமர்சனமாகப் பார்க்காமல், அவற்றைச் சரிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். “என் மொழி பிழைத்துக் கிடக்கும் இடத்தில், பாராட்ட எனக்கு எதுவும் இல்லை” என மொழிப்பற்றாளர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உரிய அமைச்சு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, புறக்கோட்டை மத்திய நிலையத்திலுள்ள இந்தப் பிழைகளைத் திருத்துவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய அவமானங்கள் நேராத வண்ணம் உரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேஜி
