“எதிரணி உறுப்பினர்கள் ஐந்து அல்லது பத்து பேர் வீதிக்கு இறங்குவதால் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம்; அடுத்த பல வருடங்களுக்கு இதனை யாராலும் அசைக்க முடியாது,” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியாவில் (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளான காணி மற்றும் வீட்டுரிமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி முக்கிய வாக்குறுதிகளையும் வழங்கினார்.
ஜனாதிபதியின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
மலையக மக்களுக்கான காணி மற்றும் வீட்டுரிமை
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்குரிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்டகாலமாக நிலவும் காணிப் பிரச்சினையைத் தீர்த்து, முறையான காணி மற்றும் வீட்டு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி திகழும் என உறுதியளித்தார்.
மலையகத் தோட்டங்களில் பாட்டன் மற்றும் தாய்மார் உழைத்துக் கஷ்டப்பட்ட சூழலில் இருந்து அடுத்த தலைமுறை மீள்வதற்கு கல்வியே சிறந்த வழியாகும்.
தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும் எனவும், கல்விக்கான வளங்கள் மற்றும் வசதிகள் நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“நாம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களே ஆகின்றன. மக்கள் எம்முடன் இருப்பதால் இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாது. நாட்டைப் படிப்படியாகக் கட்டியெழுப்புவதற்குரிய தெளிவான திட்டம் எம்மிடம் உள்ளது,” என ஜனாதிபதி தெரிவித்தார்.
சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதை வலியுறுத்திய அவர், “ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் அதிகளவில் சிறைக்குச் செல்லும் ஆண்டாக 2026-ஆம் ஆண்டு அமையக்கூடும்” எனத் தெரிவித்து ஊழலுக்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்தினார்.
